தொடரும் அடுத்தடுத்த சம்பவங்கள்! அச்சத்தில் தமிழக மீனவர்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
Nagapattinnam Tamil Nadu fishermen afraid ongoing robbery
நாகப்பட்டினம், வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதசாமி (வயது 45). கடந்த 21ஆம் தேதி இவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் இவருடன் ராமராஜன் (வயது 32 ), செல்வராஜ் (வயது 50) மற்றும் ஒரு படகில் அருள்பாண்டியன், கண்ணன், சாமிநாதன் உள்ளிட்ட 4 பேர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் 6 பேர், வைத்தியநாதசாமி, அருள்பாண்டியன் இருவரின் படகுகளில் ஏறி அதில் இருந்தவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர்.
பின்னர் படகுகளில் இருந்த ஜி.பி.எஸ் கருவி, மீன்பிடி வகைகள், செல்போன் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதனை அடுத்து, மீனவர்கள் நேற்று காலை வெள்ளப்பள்ளம் கடற்கரைக்கு வந்து வேதாரணியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பிறகு இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போல் ஆற்காடு துறையைச் சேர்ந்த 11 மீனவர்களை கடந்த 21ஆம் தேதி இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்தனர்.
இந்த நிலையில் தற்போது வெள்ளப்பள்ளம் மீனவர்களை தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Nagapattinnam Tamil Nadu fishermen afraid ongoing robbery