கொலையா...? தற்கொலையா...? அடர்ந்த காட்டில் சிதறிய மனித எலும்புகள்...4 மாதங்களாகத் தேடப்பட்ட சின்னசாமியா...? பரபரப்பு பின்னணி என்ன...?
Murder or Suicide Human bones scattered dense forest Chinnaswamy who searched 4 months What background
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே அடர்ந்த வனப்பகுதியில் மனித மண்டை ஓடு மற்றும் தொடை எலும்பு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஒரு ஜோடி செருப்பு மற்றும் நொறுங்கிய செல்போனின் உதிரி பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், வனப்பகுதியில் மர்மமாக உயிரிழந்தது யார்? கொலை செய்யப்பட்டு உடல் அங்கு வீசப்பட்டதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஞ்செட்டி அருகே பனையூர் கிராமத்தை ஒட்டியுள்ள காப்புக்காட்டில் குந்துக்கோட்டை வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வனக்காப்பாளர் சிவக்குமார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, வனப்பகுதியில் மனித மண்டை ஓடு ஒன்று கிடப்பதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடியபோது, தொடை எலும்பு, ஒரு ஜோடி செருப்பு மற்றும் உடைந்து சிதறிய செல்போனின் உதிரி பாகங்கள் கிடந்தது தெரியவந்தது.இதனால் சந்தேகம் அடைந்த வனக்காப்பாளர், உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வனத்துறையினர் அஞ்செட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் கிடைத்ததும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் பிற பொருட்களை கைப்பற்றினர்.
பின்னர் அவற்றை மருத்துவப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மண்டை ஓடு மற்றும் எலும்புகள் யாருடையது என்பது குறித்து காவலர்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? இயற்கையான மரணமா அல்லது கொலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றனர்.இதற்கிடையே, பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில், வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் அவருடையதாக இருக்குமா? என்ற சந்தேகம் காவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சின்னசாமி மாயமானது தொடர்பான தகவல்களையும் காவலர்கள் திரட்டி வருகின்றனர்.
அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை முடிவடைந்த பின்னரே, அவை எந்த வயதுடைய நபருடையது மற்றும் அது சின்னசாமியுடையதா என்பது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தெரியவரும் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் கிடைத்த செல்போன் உதிரி பாகங்கள், செருப்பு உள்ளிட்ட பொருட்களையும் முக்கிய தடயங்களாக கருதி காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அஞ்செட்டி சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பரிசோதனை முடிவுகள் வெளியாகும் நிலையில், இந்த மர்ம சம்பவத்தின் பின்னணி குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Murder or Suicide Human bones scattered dense forest Chinnaswamy who searched 4 months What background