நெல்லை போக்குவரத்து மண்டலத்தில பல நூறு கோடி போலி டிக்கெட் மோசடி: ஆதாரங்களை எரிக்க லாரிகளில் கடத்தப்பட்ட டிக்கெட் பண்டல்கள்!
Multi Crore Fake Ticket Scam Unearths in Tirunelveli Transport Zone Officials Burn Evidence
நெல்லை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக, பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான போலி டிக்கெட் மோசடி அரங்கேறியுள்ளதாகத் தற்பொழுது அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. இந்த மெகா ஊழலில் போக்குவரத்துக் கழகத்தின் உயர் அதிகாரிகள் பலருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மோசடியின் பின்னணி மற்றும் செயல்பாட்டு முறை
உயர் அதிகாரிகள் சிலர் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பேருந்து நடத்துநர்களைப் (Conductors) பல செட் போலி டிக்கெட்டுகளைப் பயணிகளுக்கு வழங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அரங்கேறிய முறைகேடுகள் பின்வருமாறு:
போலி கணக்குகள்: பேருந்துகள் இயங்குவதற்கான செயல்பாட்டுச் செலவுகள் (Operational Costs) மற்றும் தினசரி டிக்கெட் வருவாயை முற்றிலும் போலி கணக்குகள் மற்றும் போலி பதிவேடுகள் மூலம் காட்டி, பொதுப் பணம் பெருமளவில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
டீசல் முறேகடு: பல நேரங்களில் பேருந்துகள் பணிமனையை விட்டு இயக்கப்படாத நிலையிலும், அவற்றிற்குப் போலி டிக்கெட் புத்தகங்கள் மற்றும் எண்களைத் தயார் செய்து, டீசல் நிதியையும் அரசுப் பணத்தையும் அதிகாரிகள் கூட்டாகச் சேர்ந்து சுருட்டியுள்ளனர்.
ஆதாரங்களை அழிக்க நள்ளிரவில் எரிப்பு
கடந்த 2024 பிப்ரவரி 28 முதல் மின்னணு இயந்திரம் (ETM) மூலம் டிக்கெட் வழங்கும் நவீன முறை அமலுக்கு வந்தது. இந்த டிஜிட்டல் முறையினால் தங்களின் போலி டிக்கெட் மோசடி முற்றிலும் அம்பலமாகிவிடும் என்று அஞ்சிய அதிகாரிகள், அதற்கு முன்பாகவே தங்களின் தடையங்களை அழிக்கத் துணிந்தனர்.
சிசிடிவி-யில் சிக்கிய காட்சிகள்: கடந்த 2024 பிப்ரவரி 2-ஆம் தேதியன்று நெல்லை போக்குவரத்து மண்டல அலுவலகத்திலிருந்து இரண்டு லாரிகள் கணக்கில் வராத டன் கணக்கிலான டிக்கெட் பண்டல்களை ஏற்றிக்கொண்டு பாபநாசம் பணிமனைக்குச் சென்றுள்ளன. அங்குள்ள சில அதிகாரிகளின் துணையோடு அந்தத் டிக்கெட் கட்டுகள் அனைத்தும் நள்ளிரவில் முழுமையாக எரித்து சாம்பலாக்கப்பட்டன. லாரிகள் வந்தது மற்றும் உயர் அதிகாரிகள் பணிமனைக்கு நள்ளிரவில் வந்து சென்ற அனைத்துக் காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
டிவிகே அரசுக்குக் கோரிக்கை
இந்த பிரம்மாண்ட ஊழலில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் பலர் இன்னமும் தென் மண்டலத்திலேயே எவ்வித பயமுமின்றித் தொடர்ந்து உயர்பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே, தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் (DVAC) துணையுடன் தீவிர உயர்மட்ட விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்ட ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Multi Crore Fake Ticket Scam Unearths in Tirunelveli Transport Zone Officials Burn Evidence