‘மோன்தா’ புயல் எதிரொலி: காலை 10 மணிவரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Montha Cyclone tamilnadu Rain IMD
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும், கடலோரப் பகுதிகளில் அலைகள் உயரக்கூடியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புயல் தற்போது தென்கிழக்கு வங்கக் கடலில் வடமேற்கே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் இயக்கம் தொடர்ந்தால், புயலின் வெளிப்புற வட்டாரம் தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளைத் தொட்டு மழை தீவிரத்தை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Montha Cyclone tamilnadu Rain IMD