மாயமான செல்லப்பூனை... மீட்டுத் தருபவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்! ஈரோட்டில் பரபரப்பு...!
Missing pet cat 50 thousand reward recovery Excitement Erode
ஈரோட்டில் வீட்டில் இருந்து காணாமல் போன செல்லப்பூனையை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அதன் உரிமையாளரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் லாசர். இவரது மகள் ஆருத்ரா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் செர்பியன் இனத்தைச் சேர்ந்த பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அந்த பூனைக்கு ரோச் என பெயரிட்டுள்ளார்.சமீபத்தில் ஆருத்ரா பெங்களூருவில் இருந்து ஈரோட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தபோது, தனது அன்பு செல்லப்பூனையான ரோச்சையும் அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் இருந்த ரோச் திடீரென காணாமல் போனது.இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்து பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூனையை தீவிரமாக தேடினர்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடனும் தேடுதல் நடைபெற்றது. ஆனால், பல இடங்களில் தேடியும் ரோச் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பூனையை பிரிந்த ஆருத்ரா மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து ஜான் லாசர் சமூக வலைதளங்களில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மகள் மிகவும் மனவேதனையுடன் தனது செல்லப்பூனையை தேடி வருவதாகவும், ரோச்சை கண்டுபிடித்து மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்க்க உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், காணாமல் போன பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.செல்லப்பூனையை மீட்டுத் தருவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சன்மானம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Missing pet cat 50 thousand reward recovery Excitement Erode