கட்டாய மாற்று சான்றிதழ்..தனியார் பள்ளி மீது நடவடிக்கை தேவை..ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!
Mandatory change certificate action needed against private school Omshakti Sekhar emphasizes
100 சதவிகித தேர்ச்சிக்காக கட்டாய மாற்று சான்றிதழ் வழங்கும் ஒரு சில தனியார் பள்ளியில் மீது உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்..
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் ஏப்ரல் மாதத்தில் துவங்கியதையடுத்து, மே மாத கோடை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறந்து தற்போது 20 நாட்கள் கடந்துள்ளன.இந்நிலையில், ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்காக வழங்கப்படும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே சமயம், பாடப்புத்தகங்கள் பல வகுப்புகளுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும்.
மேலும், மாணவ, மாணவிகளுக்குத் தவறாமல் வழங்க வேண்டிய அரசு சீருடைகள், ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று வரை வழங்கப்படவில்லை. சில அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை உடனடியாக தீர்க்க வேண்டும்.
அதேபோல், 100-க்கும் மேற்பட்ட சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பல அரசு பள்ளிகளில் சமூக அறிவியல் பாடம் கற்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. வயது தளர்வை வழங்கினால் மட்டுமே புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியுமென அறியப்படுகிறது. எனவே, இது தொடர்பாக கல்வித்துறை உடனடியாக தீர்வை எடுத்துத் தர வேண்டும்.
சில தனியார் பள்ளிகள் உரிய கட்டமைப்பு இல்லாமல் இயங்கி வரும் நிலையில் தனியார் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். 100 சதவிகித தேர்ச்சிக்காக கட்டாய மாற்று சான்றிதழ் வழங்கும் ஒரு சில தனியார் பள்ளியில் மீது உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
அதேபோன்று அரசு பள்ளிகளை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் பயின்று வரும் சூழலில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாநில வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கல்வித்துறையில், இவ்வாறான அடிப்படை குறைகளை உடனடியாக சரி செய்து, அனைத்து தேவைகளும் மாணவ, மாணவிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது கல்வித்துறையின் கடமை ஆகும். எனவே, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Mandatory change certificate action needed against private school Omshakti Sekhar emphasizes