சென்னையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - புகாரால் சிக்கிய தனியார் நிறுவன ஊழியர்.!
man arrested for harassment in chennai anna nagar
சென்னையில் உள்ள அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-
"எனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். எனது உறவினர்களுடன் தனியாக வசித்து வருகிறேன். அண்ணாநகரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முகப்பேரைச் சேர்ந்த சத்யஜித் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
சத்யஜித் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்தார். அதனை நம்பிய நான், அவருடன் நெருங்கி பழகினேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யஜித் என்னை கோயம்பேட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் அங்குள்ள விடுதிக்கு என்னை அழைத்துச் சென்றார்.
அங்கு எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதை குடித்த நான் மயங்கி விட்டேன். அப்போது சத்யஜித், என்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதனை அவரது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்து கொண்டார். பின்னர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த அவர், நான் அழைக்கும் போதெல்லாம் என்னுடன் தனியாக வந்து தங்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகார் தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இளம்பெண் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சத்யஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man arrested for harassment in chennai anna nagar