பொட்டல் காட்டை காட்டி பாடம் நடத்தப்படுகிறது - பாஜக தலைவருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


பாஜகாவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கடந்த மாதம் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார். அப்போது, மதுரையில் நடைபெற்ற பாஜக பல்துறை வல்லுனர்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அங்கு அவர் பேசியதாவது,

 “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில், மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலத்தை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் எம்.பி மாணிக்கம்தாகூர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதன் பின்னர் எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவேறிவிட்டதாகவும், அதனை மிக விரைவில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். அது பேரதிர்ச்சியாக இருந்தது. சென்ற வாரம் மத்திய சுகாதாரத்துறையின் அதிகாரிகள் பார்வையிட்டு இன்னும் ஆரம்ப வேலையே நடக்காமல் இருப்பதாக தெரிவித்தனர். அதேபோல், எம்.பி. மாணிக்கம்தாகூர் பார்த்த போது ஒரு வேலையும் நடக்கவில்லை. 

ஆனால் இடைப்பட்ட இந்த நான்கு நாளில் 95% பணிகள் முடிந்து விட்டதாக ஆளும் கட்சியினர் தெரிவித்தது பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு வேளை இரவோடு இரவாக கட்டி முடித்துவிட்டனரோ என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால் இப்பொழுது அவர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் புல் புல் பறவைகளின் மூலமாகத்தான் செய்து முடிக்கிறார்கள். 

இதனால் தான் நானும் மாணிக்கம் தாகூரும் நேரடியாக பார்வையிடலாம் என்று வந்தோம். இங்கு வந்து பார்த்தால் ஏற்கனவே இருந்த பெயர் பலகை கூட காணவில்லை” என்று தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவு செய்தியிருந்தார். 

இந்நிலையில், இன்று இமாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  அதன்பிறகு, பிலாஸ்பூர் பகுதியில் அமைந்துள்ள, 95% பணிகள் நிறைவடைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். 

இதனை சுட்டிக்காட்டி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக். 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. அதேபோல் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது.

அந்த பொட்டல்காட்டைக் காட்டி, 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிய வேண்டும்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai aims hospital mp vengadesan visit


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->