மீண்டும் அட்டூழியத்தில் கொடைரோடு சுங்கச்சாவடி.. போராட்டத்தில் இறங்கிய மக்கள்.!!
Kodaikanal Road toll plaza govt bus stopped
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் அரசு பேருந்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடைரோட்டில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை, பள்ளப்பட்டி, கொடைரோடு ஊர்களுக்கு திண்டுக்கல் அரசு போக்குவரத்துகழக பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்த வழித்தடத்திற்கு திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பணம் செலுத்தி அனுமதி வாங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த ஊர்களுக்கு உரிமம் பெற்ற பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு பதிலாக, பிற பதிவெண் கொண்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்துகளை அனுமதிக்கவில்லை. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதனையடுத்து காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.
இதன்பின்னர் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒரேயொரு பேருந்தை அனுப்ப ஒத்துழைத்தனர். பயணிகள் அனைவரும் அந்த பேருந்தில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் ஒருமணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கொடைரோடு சுங்கச்சாவடியில் மாற்று பாதையில் சென்ற வாகன ஓட்டியை சுங்க சாவடி ஊழியர்கள் தாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kodaikanal Road toll plaza govt bus stopped