2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சலுகையா?சீமான் கேள்வி!
Is the benefit only for those who joined after the year 2011? Seemans question
2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்குப் பணிக்கால வரம்பு குறைப்பு பொருந்தாது என்பது அக்காலகட்டத்தில் பணியில் சேர்ந்த காவலர்களுக்கு திமுக அரசு செய்கின்ற பச்சைத்துரோகமாகும் என சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,புதிய அரசாணையின்படி, 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்நிலையில் ஆட்சி முடிவுறும் தருவாயில் காவல்துறையினரின் அதிருப்தியைச் சமாளிக்க கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது காவலர்கள் நிலை உயர்வுக்கான காலவரம்பினைக் குறைப்பதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள்.
அதன்படி, தமிழ்நாடு அரசு கடந்த 13.06.2025 அன்று வெளியிட்ட புதிய அரசாணையின்படி தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்து பத்தாண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர்கள், முதல்நிலை காவலராகவும், அதன்பின் அடுத்த 3 ஆண்டுகள் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்த பிறகு ஏட்டாகவும், அடுத்த 10 ஆண்டுகள் ஏட்டாகப் பணிபுரிந்த பிறகு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகவும் தரம் உயர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதை மாற்றி, 23 ஆண்டுகளாகக் (2 ஆண்டுகள்) குறைத்துள்ளது.
ஆனால், பதவி உயர்வு கால வரம்பானது 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று திமுக அரசு அவ்வரசாணையில் தெரிவித்துள்ளதால், 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு திமுக அரசு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
அரசாணையில் மட்டும் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சலுகை என்பது அப்பட்டமான ஏமாற்றாகும்.
திமுக அரசிற்கு காவலர்களுக்கு பதவி உயர்வில் கால வரம்பு சலுகை வழங்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் காவலராகப் பணியில் சேர்ந்து தற்போது 23 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள அனைத்து காவலர்களுக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்குவதே முறையானதும், சரியானதுமாகும். 23 ஆண்டுகள் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்துள்ள காவலர்கள் அனைவருக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். கட்டுப்பாடு விதித்து வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற்று, புதிய அரசாணையை வெளியிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Is the benefit only for those who joined after the year 2011? Seemans question