கரூர் கூட்ட நெரிசல்: CBI விசாரணை கோரிய எடப்பாடி – கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள், இப்போது கலங்குகிறதா? ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Karur stampede Edappadi demands CBI probe Eyes that were not troubled by the deaths caused by illicit liquor are they now troubled Edappadi Palaniswami questions Stalin
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் மீது CBI விசாரணை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். மேலும், “எதிர்க்கட்சிகள் இதுவரை அரசியல் செய்யவில்லை; ஆனால், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட போட்டோஷூட் வீடியோ பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர் மரணம் அடைந்ததோடு, பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் எடப்பாடி கரூருக்கு சென்று மரணமடைந்தோருக்கு அஞ்சலி செலுத்தியும், காயமடைந்தோருக்கு ஆறுதல் தெரிவித்தும் ஊடகங்களைச் சந்தித்தார்.
பின்னர் அவர் வெளியிட்ட குறிப்பில் முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து கூறியதாவது:“தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதல்வர், எப்படிப்பட்ட ‘பொம்மை முதல்வர்’ என்பதற்கே இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ சாட்சி! நான் கரூரில் மக்களின் உணர்வுகளைத் தெரிவித்து, சந்தேகங்களைப் பதிவு செய்தேன். ஆனால், உங்கள் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக சொல்கிறீர்கள்.
உங்கள் கட்சியினர் ‘தமிழ்நாடு மாணவர் சங்கம்’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டுவதும் அவதூறுதானா? காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட குளறுபடிகள், ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி காட்சிகள் வெளிவந்ததும் வதந்தியா?
உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்க மாட்டிக் கொண்டது வதந்தியா? உங்கள் மகனும் துணை முதல்வருமானவர் கரூரில் போட்டோஷூட் முடித்து துபாய்க்கு விடுமுறை பறந்தது வதந்தியா?
கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் மரணமடைந்தவர்களுக்காக கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?
சென்னை ஏர் ஷோவில் உங்கள் குடும்பத்துடன் பார்வையிட்ட போது, அங்கே 5 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர்; அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா?
எதிர்க்கட்சிகள் யாரும் அரசியல் செய்யவில்லை. ஆனால் உங்களின் இந்த வீடியோ தான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!”
மேலும், “நீங்கள் நியமித்துள்ள ஒருநபர் விசாரணை ஆணையத்தின் காட்சிகள் ஊடகங்களில் வெளிவருவது மக்களிடையே நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது. இது ஒருதலைப்பட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் ‘Eye-wash’ ஆணையமாகவே தோன்றுகிறது. எனவே, மக்கள் உண்மை நிலை தெரிந்து நீதியைக் கிடைக்க CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் மீது CBI விசாரணை வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையும், முதல்வர் ஸ்டாலின் மீது அவரின் கடுமையான விமர்சனமும் தமிழக அரசியலில் புதிய சூடு ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Karur stampede Edappadi demands CBI probe Eyes that were not troubled by the deaths caused by illicit liquor are they now troubled Edappadi Palaniswami questions Stalin