செந்தில் பாலாஜி வழக்கு! நீதிபதி சக்திவேல் மீண்டும் விலகல்!
Justice Sakthivel recused himself from Senthil Balaji case
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கை எந்த நீதிமன்றம் விசாரணை நடத்துவது என்பது குறித்த முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வின் முன்பு செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் இளங்கோ நேற்று முறையிட்டார்.
அதற்கு ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் இந்த மனுவை எவ்வாறு ஏற்பது என நீதிபதி சுந்தர் கேள்வி எழுப்பி இருந்தார்.

செந்தில் பாலாஜி வழக்கிற்காக மாற்று அமர்வு நீதிபதி விடுமுறை என்பதால் இந்த அமர்வின் முன்பு முறையிட்டதாகவும், நிர்வாக ரீதியிலான உத்தரவை பிறப்பித்தால் கூட போதும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோ கோரிக்கை வைத்திருந்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி சுந்தர் ஜாமீன் மனு யார் விசாரணை செய்வது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என தெரிவித்த நீதிபதி சுந்தர், இந்த ஜாமீன் வழக்கு குறித்து தலைமை நீதிபதியிடம் முறையீடுகள் என அறிவுறுத்தினார்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணைக்காக மதுரை நீதிமன்றத்தில் இருப்பதால் செந்தில் பாலாஜி தரப்பினரால் முறையிட முடியவில்லை. இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் மாற்று அமர்வாக அறிவிக்கப்பட்ட நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு விடுமுறை காரணமாக இன்று கூடாததால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்தான வழக்கு மீண்டும் நீதிபதி சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து விலகிய நீதிபதி சக்திவேல் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழக்கில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து நீதிபதி சக்திவேல் இரண்டாவது முறையாக விலகியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் திங்கட்கிழமை செந்தில் பாலாஜி தரப்பினர் தலைமை நீதிபதியிடம் முறையிட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
English Summary
Justice Sakthivel recused himself from Senthil Balaji case