நீதித்துறையை தொழிலாக மட்டும் கருதாமல், சேவையாக நினைத்து பணியாற்ற வேண்டும்- நீதிபதி பி.என்.பிரகாஷ்..!
Judiciary should not be considered only as a profession, but as a service
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் அவர்கள், 'நீதிமன்றங்களில் உண்மைத்தன்மை இல்லை என்பதே எதார்த்தமான உண்மை' என்று பேசினார்.
நீதிபதி பி.என்.பிரகாஷ் மதுரை காந்தி மியூசியத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில், 'வழக்கறிஞர் காந்தி' என்ற கருத்துருவில் மகாத்மா காந்தி வழக்கறிஞராக வாழ்ந்த வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
காந்தி மியூசியம், மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் போல ஒரு புனித தலம் ஆகும். அதனால், காந்தி மியூசியதிற்கு வந்தால் நமது ஆன்மாவில் இன்பம் ஏற்படும். நீதித்துறையின் உடன்பிறவா சகோதரியே இது உண்மை. ஆனால் நீதித்துறையில் இப்போது உண்மை இருக்கிறதா என்று கேட்டால், உண்மைத்தன்மை இல்லை என்பதே எதார்த்தமான உண்மை.
இப்போது வரும் வழக்குகளில் உண்மையில்லாத விஷயங்களை வைத்து தான் நாங்கள் தீர்ப்பு கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று உண்மையோடு சேர்த்து இரண்டு, மூன்று பொய்களையும் சேர்த்து வாதாடினால் மட்டுமே நீதி கிடைக்கும் என நமது 'சிஸ்டத்தில்' ஆணித்தரமாக பதிந்துவிட்டது.
மகாத்மா காந்தி காலத்திலேயே நீதித்துறையில் பொய் சாட்சிகள் இருந்துள்ள நிலையில், காந்திஜி உண்மையான வழக்குகளை மட்டும் வாதாடி, நம் அனைவரின் மனதிலும் இன்றுவரை மகாத்மாவாக இருக்கிறார். நீதித்துறையை வழக்கறிஞர்கள் தொழிலாக மட்டும் கருதாமல், சேவையாக நினைத்து பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலா அமைச்சக தென் மண்டல இயக்குனர் முகமது பரூக், காந்தி மியூசிய பொருளாளர் செந்தில்குமார், செயலாளர் நந்தாராவ், துணைத்தலைவர் ஜவஹர்பாபு, செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
English Summary
Judiciary should not be considered only as a profession, but as a service