கடன் தொகையை திருப்பிக் கேட்ட நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்...! பழக்கடைக்காரர் அதிரடி கைது...!
Jewelry store owner attacked demanding loan repayment fruit shop owner arrested action
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வாங்கிய கடன் பணத்தை திருப்பிக் கேட்ட நகைக்கடை உரிமையாளரை தாக்கியதாக பழக்கடைக்காரரை காவலர்கள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செக்கடி புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (63).

இவர் சாத்தான்குளம் முதன்மை சந்தைப் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு, சாத்தான்குளத்தில் பழக்கடை நடத்தி வரும் கொம்பன்குளம் மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், தான் வங்கியில் அடமானம் வைத்திருந்த நகை ஏலத்துக்கு வர இருப்பதாகவும், அதனை மீட்பதற்கு ரூ.1 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும் பாஸ்கர், ரவியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த தொகையை கடனாக வழங்குமாறும் கேட்டுள்ளார்.இதனை நம்பிய ரவி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பாஸ்கரின் வங்கிக் கணக்குக்கு ரூ.1 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் பாஸ்கர் ரூ.70 ஆயிரத்தை மட்டும் ரவியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தை வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொறுமையிழந்த ரவி, பாஸ்கரின் வீட்டுக்கு நேரில் சென்று தனக்கு வழங்க வேண்டிய ரூ.30 ஆயிரத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், ரவியை அவதூறாக பேசி சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த ரவி, சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக ரவி அளித்த புகாரின் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, நகைக்கடை உரிமையாளரை தாக்கியதாக பாஸ்கரை காவலர்கள் கைது செய்தனர்.
English Summary
Jewelry store owner attacked demanding loan repayment fruit shop owner arrested action