போதை ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துங்கள்.. அதிமுக உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்!
Intensify efforts to eliminate addiction AIADMK rights recovery team emphasizes
மாநிலத்தின் வளமான எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள் பரவலை கட்டுப்படுத்தும் உறுதியான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்என புதுச்சேரி மாநில அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுவை மாநிலத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை வழங்கிய உத்தரவை மேற்கோளாக கொண்டு, அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சுப-துக்க நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் பேனர்களும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு மாவட்ட நிர்வாகம் என்பது அனைத்து மக்களுக்கும் சமநிலையுடன் சேவைகள் வழங்கும் பொறுப்போடு செயல்பட வேண்டியது ஆகும். ஆனால் சிலரையே குறிவைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலை காணப்படுவது வருத்தமளிக்கக்கூடியது.
மாநிலத்தில் 23% மாணவர்கள்போதைப் பொருள் பழக்கத்திற்குள்ளாகியுள்ளதாக ஆளுநர் அவர்களே கவலையுடன் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில், மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது? இதனால் எத்தனை சதவீதம் போதைப் பொருள் பரவல் குறைந்துள்ளது என்பதை தெரிவிக்க முடியுமா?
ஒவ்வொரு மாதமும் போதை ஒழிப்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன என்றாலும், அதிகாரிகள் பேசிச் செல்வது தவிர தீர்வுகளோ, செயல்திறனோ தென்படவில்லை.
இந்நிலையில், அரசியல் கட்சிகளை குறிவைத்து கொடி கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை முன்னிலைப்படுத்தும் மாவட்ட நிர்வாகம், அதற்கு பதிலாக மாநிலத்தின் வளமான எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள் பரவலை கட்டுப்படுத்தும் உறுதியான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எப்படியும் இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்படும். அப்போது அரசியல் கட்சிகள் தாங்களாகவே கொடி கம்பங்களை அகற்றும் நிலை உருவாகும். எனவே, தற்போது அரசு துறைகளை இந்த வேலைக்காக நியமிப்பது அவசியமற்றதாகும்.
இவை அனைத்தையும் விட முக்கியமாக, வரவிருக்கும் மழைக்காலத்தில் வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகள், போதை ஒழிப்பு நடவடிக்கைகள் போன்ற ஆக்கப்பூர்வ செயல்திட்டங்களை மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்பது எங்களின் வலியுறுத்தலாகும் என புதுச்சேரி மாநில அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.
English Summary
Intensify efforts to eliminate addiction AIADMK rights recovery team emphasizes