சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட வேண்டும் : மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!
Illegal shrimp farms must be closed Chennai High Court orders the District Collector
திருவாரூரில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள இறால் பண்ணைகளினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டில், தில்லைவிளாகம் கிராம பஞ்சாயத்து தலைவர் யோகநாதன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
அப்போது அந்த மனுவில் பஞ்சாயத்து தலைவர் யோகநாதன் கூறியிருத்தந்து,இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களால், கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது.உலக பிரசித்தி பெற்ற உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே விவசாய நிலங்களுக்கு அருகே உள்ள இறால் பண்ணைகளை அகற்ற கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கடலோர மீன்வளர்ப்பு ஆணையச் சட்டத்தின்படி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே கடலோரப்பகுதியில் இறால் பண்ணைகளை நடத்த முடியும்.
அங்கு முறையான உரிமம் இல்லாமலும், அனுமதி பெறாமலும் செயல்படும் இறால் பண்ணைகளை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமம் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறிய இறால் பண்ணைகள் மீதும் இதுபோல நடவடிக்கை எடுக்கவேண்டும் . இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் 12 வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Illegal shrimp farms must be closed Chennai High Court orders the District Collector