ஹவாலா பணமா? கடலூர் ஆம்னி பேருந்தில் 35 லட்சம் பணத்துடன் சிக்கிய நபர்...! விசாரணையில் போலீஸ்
Hawala money Man caught with Rs 35 lakhs in Cuddalore omni bus Police investigating
தினந்தோறும் 24 மணி நேரமும், கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு, கடலூர் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பயணி ஒருவரிடமிருந்த கைப்பையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது கட்டுகட்டாக ரொக்கப் பணம் இருந்தது.இதைப் பார்த்த காவலர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக 57 வயது மதிக்கத்தக்க நபரையும் பணத்தையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது காவலர்கள் பணத்தை எண்ணியபோது ரூ.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த நபர் குறித்தும், பணம் எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பதனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணம் கணக்கில் காட்டாத பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அண்மை காலமாக கடலூர் வழியாக லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Hawala money Man caught with Rs 35 lakhs in Cuddalore omni bus Police investigating