உண்ணாவிரதம் டூ ஒத்துழையாமை! - அரசு மருத்துவர்களின் போராட்டம் அடுத்த கட்டத்திற்குப் பாய்ச்சல்; முடங்குகிறதா மருத்துவ நிர்வாகம்?
government doctors protest escalates next stage medical administration grinding halt
தமிழக அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, தற்போது 'ஒத்துழையாமை இயக்கமாக' உருவெடுத்துள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், இன்று முதல் போராட்டத்தின் வீரியத்தை மருத்துவர்கள் அதிகரித்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காத நிலையில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு, அலுவல் சார்ந்த வாட்ஸ்அப் குழுக்கள், ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளைப் புறக்கணிப்பதாக மருத்துவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை பணியாற்றும் மருத்துவர்கள் இதில் பங்கேற்றுள்ளதால் நிர்வாகப் பணிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடரும் சம்பள உயர்வு கோரிக்கை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான ரூ. 3,000 ஊக்கத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததே இந்தப் போராட்டத்திற்குக் காரணம் என டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"பொதுமக்களின் சிகிச்சைக்கு எவ்வித இடையூறும் இன்றி, அதே சமயம் அரசின் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காத வகையில் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை இந்தப் போராட்டம் தொடரும்; அதன் பின்னரே அடுத்தகட்ட விஸ்வரூபம் குறித்து முடிவெடுக்கப்படும்" என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
English Summary
government doctors protest escalates next stage medical administration grinding halt