புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கும் பணி! அமைச்சர்கள் நேரு மற்றும் சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.!
Gangadheeswara temple pond renovation work
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் குளத்தினை சீரமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-104, புரசைவாக்கத்தில் தமிழ்நாடு அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்தத் திருக்கோயிலில் உள்ள குளத்தினை புனரமைத்து சீரமைக்கும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் குளத்தை சீரமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர் பாபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் இந்தத் திருக்கோயில் குளத்தில் தூர்வாருதல், குளத்தை சுற்றிலும் கரைகளை பலப்படுத்துதல், கருங்கல் படிக்கட்டுகள் அமைத்தல், கரைகளை சுற்றி நடைபாதை அமைத்து மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது.
மேலும், இந்தக் கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் அமைத்து அவற்றிலிருந்து வரும் மழைநீரினை கோயில் குளத்தில் சேமிக்க மழைநீர் இணைப்புகள் அமைக்கவும், மழைநீர் இணைப்புகளில் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு சுத்தமான நீர் இக்கோயில் குளத்தில் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் திரு.குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Gangadheeswara temple pond renovation work