இலவச பயணம்… ஆனால் அபராதம்! நெல்லையில் 2 பெண்களுக்கு டிக்கெட் சர்ச்சை..!
Free travel but fine Ticket controversy 2 women Nellai
தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றாக ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். 2021-ஆம் ஆண்டு அறிமுகமான இந்த முயற்சி, பெண்களிடையே பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், நெல்லையில் அரசு டவுன் பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கூறி இரண்டு பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி சென்ற பேருந்தில் இறங்கிய பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை நடைபெற்றது. அப்போது அந்த பேருந்தில் பயணித்த இரண்டு பெண்களிடம் தனித்தனி டிக்கெட் இல்லாததால், தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பயணித்த பெண்கள் கூறுகையில், “கண்டக்டர்கள் பலருக்கு சேர்த்து ஒரே டிக்கெட் கொடுப்பது வழக்கம். 3 பேருக்கு ஒன்று, 6 பேருக்கு ஒன்று என மொத்தமாக வழங்குகின்றனர்.
டிக்கெட் வைத்திருந்த நபர் முன்னதாக இறங்கி விட்டால், மற்றவர்களிடம் டிக்கெட் இருக்காது. இந்த குழப்பத்தால்தான் எங்களிடம் டிக்கெட் இல்லை. விளக்கம் அளித்தும் அபராதம் விதித்தனர்” என குற்றம்சாட்டினர்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அதிகாரிகள், “பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. இருந்தாலும் சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர் மற்றும் பரிசோதகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
இலவச பயணம் என்றாலும் டிக்கெட் பெறுவது அவசியம். அதேசமயம், டிக்கெட் இல்லாமல் இருந்த பெண்களிடம் அபராதம் வசூலிப்பதற்குப் பதிலாக எச்சரித்து அனுப்பியிருக்கலாம். இதுபற்றி பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
English Summary
Free travel but fine Ticket controversy 2 women Nellai