குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப்பட்டா: மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!
Free land pattas for Guru families Opposition leader urges the district collector
வில்லியனுார் தொகுதியில் வசித்து வரும் குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் வலியுறுத்தினார்.
வில்லியனுார் தொகுதிக்குட்பட்ட மூர்த்தி நகர் கூடப்பாக்கம் சாலை மற்றும் ஒதியம்பட்டு திருக்காஞ்சி செல்லும் சாலையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் 80 குடும்பத்தை சேர்ந்த குருவிக்கார மக்கள் தார்பாய் அமைத்து வசித்து வருகின்றனர்.
சாலையோரத்தில் வசிப்பதால் பல்வேறு இன்னல்களை, விபத்துகளை அந்த மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே அரசு குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் 50 க்கும் மேற்பட்ட குருவிக்கார மக்களுடன் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்கள், அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பழங்குடியின விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் ஏகாம்பரம், திமுக நிர்வாகிகள் வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், கிளைக் கழக நிர்வாகிகள் மிலிட்டரி முருகன், ரகு, அருள், தங்கராசு, விஜய், கார்த்தி, சத்யராஜ், ரோஜா, பத்மா, ரதி, ஜெயந்தி, அஸ்வினி, பிரியா, செல்வி, வடிவேலு, அஞ்சலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
English Summary
Free land pattas for Guru families Opposition leader urges the district collector