கிருஷ்ணகிரி அருகே காலி மதுப்பாட்டிலை கொடுப்பதில் தகராறு; இளைஞர் கல்லால் அடித்து கொலை; டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் மறியல் போராட்டம்..!
Following the murder of a young man during a dispute near Krishnagiri people staged a road blockade demanding the closure of the TASMAC shop
நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு பகுதியை சேர்ந்த 32 வயதான அருண்குமார், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் வேளாண் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு 8 மணிக்கு தனது நண்பர்களான ஊத்தங்கரை அடுத்த வெங்கடாதம்பட்டியை சேர்ந்த தீபன்ராஜ், மதன், இன்பசேகர், பாரதிராஜா ஆகியோருடன் கிருஷ்ணகிரி - தானம்பட்டி சாலையில் ஆர்.பூசாரிப்பட்டி குறிஞ்சி நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, மது வாங்கி, அப்பகுதியில் காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இரவு 09.15 மணியளவில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடிச் சென்றதை இதையடுத்து, காலி மதுப்பாட்டில்களை அருகில் உள்ள பெட்டிக்கடையில் கொடுத்து பணம் வாங்க தீபன்ராஜும், அருண்குமாரும் சென்றுள்ளனர். அங்கு காலி மதுப்பாட்டில்கள் வாங்குதில், கடையில் இருந்த கார்த்திக் (24), அவரது தந்தை கோவிந்தராஜ் (48) என்பவருக்கும், அருண்குமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் சேர்ந்து அருண்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, தீபன்ராஜ் மற்ற நண்பர்கள் இரு தரப்பையும் விலக்கி அழைத்து சென்றுள்ளனர். ஆனால், டாஸ்மாக் கடையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் நண்பர்களுடன் நடந்து சென்ற அருண்குமாரை, பின்னால் வந்த கார்த்திக் கல்லால் அவரது கழுத்தில் தாக்கியுள்ளார். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்தவரை, மீண்டும், மீண்டும் கார்த்திக் கல்லால் தாக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த அருண்குமாரை, நண்பர்கள் இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்த, கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீஸார், அருண்குமாரை கல்லால் தாக்கி கொலை செய்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (செப்.19) அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் ''இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, இதுவரை 27 மனுக்கள் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. இதே பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு மதுபோதையில் ஒரு கொலை நடந்துள்ள நிலையில், நேற்று மற்றொரு கொலை நடந்துள்ளது.
இதுபோன்ற சம்பங்களால் நாங்கள் அச்சத்துடன் வசிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், நாள்தோறும் தகராறு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். எனவே, இப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை மற்றும் அனுமதியின்றி பார் போல் செயல்படும் 2 பெட்டிக்கடைகளையும் அகற்றிட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களிடம் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ராஜலட்சுமி, டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் போலீஸார் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 03 மாதங்களில் டாஸ்மாக் கடை இடம் மாற்றப்படும் என உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கொலை சம்பவத்தையடுத்து அப்பகுதி பொது மக்கள் மதுக்கடையை மூட வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Following the murder of a young man during a dispute near Krishnagiri people staged a road blockade demanding the closure of the TASMAC shop