பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க தவெக அரசு முயல்கிறதா..? வானதி சீனிவாசன் காட்டம்..!
Vanathi Srinivasan questions whether the TVK govti attempting to hand over public sector undertakings to the private sector
''சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, எழுதிய கடிதம் தொடர்பில், முதல்வர் தரப்பிலிருந்து மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்ட கடிதம் தற்போது காலதாமதமாக வெளிவந்திருப்பதன் காரணம் என்ன..?'' என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''வரலாற்றுச் சிறப்பு மிக்க, பழமை வாய்ந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய இந்திய விமான நிலைய ஆணைய (AAI) நிர்வாகத்தை மாற்றி, வேறு ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் விஜய், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க தவெக அரசு முயல்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
சென்னை விமான நிலையம், கடந்த 2024–25 அறிக்கையின் படி சுமார் 2.24 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு லாப வருவாயுடன் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
இதுமட்டுமன்றி தற்போது விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக AAI ரூ.2,467 கோடி நிதியில் வளர்ச்சித் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுவதிலும், சரக்குகள், பயணிகளைக் கையாள்வதிலும் சிறப்புடன் செயல்பட்டுவரும் AAI நிர்வாகத்தினை மாற்ற வேண்டிய அவசியம் தவெக அரசுக்கு என்ன?
இதுகுறித்து, முதல்வர் தரப்பிலிருந்து மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்ட கடிதம் தற்போது காலதாமதமாக வெளிவந்திருப்பதன் காரணம் என்ன?
ஏற்கனவே பரந்தூர் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு தமிழகத்தை 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய தவெக அரசு, அடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் கைவைத்திருப்பது இந்த அரசு உண்மையாகவே மக்களுக்கான அரசாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.
சென்னை விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவும் பயணிகள் நலன், ஊழியர்கள் நலன், பொதுத்துறை முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். முதல்வர் விஜய், தான் அனுப்பிய இது தொடர்பான கடிதத்தினை திரும்பப்பெற வேண்டும்.'' என்று வானதி ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Vanathi Srinivasan questions whether the TVK govti attempting to hand over public sector undertakings to the private sector