இணையத்தில் ஒருவருக்கு ஒருவர் சண்டை... 'இதையெல்லாம் காவலர்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா'..? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி...!
fight between people internet Should police be watching all this Madurai High Court question
சமூக வலைதளங்களில் தனிநபர்களுக்கு இடையே உருவாகும் மோதல்கள், ஈகோ பிரச்சினைகள், ஒருவரை ஒருவர் விமர்சித்து வெளியிடும் அவதூறு பதிவுகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கண்காணித்துக் கொண்டிருப்பது காவலர்களின் பணி அல்ல என மதுரை ஐகோர்ட்டு அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சமூக வலைதளத்தில் இஸ்லாமிய சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும், அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனை எதிர்த்து, தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி அந்த நிர்வாகி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் சமூக வலைதள செயல்பாடுகளும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அப்போது, இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஒருவரை ஒருவர் விமர்சித்து, பதிலுக்கு பதில் கருத்துகளை பதிவிட்டு வருவதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதுபோன்ற தனிப்பட்ட ஈகோ மோதல்களுக்கு முடிவே இல்லையா? என்றும், சமூக வலைதளங்களில் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைத் தவிர வேறு பணிகள் எதுவும் இல்லையா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், தனிநபர்களுக்கிடையே சமூக வலைதளங்களில் நடைபெறும் சண்டைகள் மற்றும் விவாதங்களை தொடர்ந்து கண்காணிப்பதையே காவலர்களின் முக்கிய பணியாக கருத முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
ஒரு தரப்பினர் தவறான அல்லது அவதூறான கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டால், அதற்கு பதிலடியாக மற்றொரு தரப்பினரும் அதே பாணியில் அவதூறு கருத்துகளை வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பதிலுக்கு பதில் கருத்துகளை வெளியிட்டு பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தின் உதவியை நாட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
சமூக வலைதளங்களில் யாரேனும் அவதூறான அல்லது சட்டவிரோதமான கருத்துகளை பதிவிட்டால், அதற்கு இணையத்திலேயே பதிலடி கொடுக்காமல், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் முறையான புகார் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
புகாரின் தன்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதே முறையான அணுகுமுறை என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
சமூக வலைதளங்களில் வார்த்தை மோதலை வளர்ப்பதை விட, சட்டத்தின் வழியை நாடுவதே பிரச்சினைக்கு உரிய தீர்வைத் தரும் என நீதிமன்றத்தின் கருத்துகள் அமைந்துள்ளன.
English Summary
fight between people internet Should police be watching all this Madurai High Court question