திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவகாரம்.. 100வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..!!
Farmers strike reaches 100th day against private sugar mill
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கரும்பு ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவம்பர் 30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தமிழ்நாடு விவசாயச் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மதிமுக மாநில செயலாளர் முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கையில் கரும்புடன் ஆதனூர் கிராமத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பல்வேறு கிராமங்கள் வழியாக திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு கண்டன முழக்கமிட்டபடி பேரணியாக சென்றனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் 100 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளிடம் அநியாயமாக நடந்து கொண்டுள்ளது. இந்தியாவிலேயே இது போன்ற மோசடி கேள்வி பட்டதில்லை. ஆனால் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ஊழல் செய்து உள்ளது.
இதனை அறியாத விவசாயிகள் மற்ற வங்கிகளில் கடன் கேட்கச் சென்றபோது தான், தங்கள் பெயரில் கடன் இருப்பது தெரிந்துள்ளது. இது ஜனநாயக நாட்டில் நடைபெறுமா என்பது தெரிய வில்லை. இது எந்த வகையிலான நியாயமாகும். இதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும். வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வரை எதிரில் வைத்துக்கொண்டு இந்த விவகாரத்தை கடுமையாக பேசி எதிரொலிப்பேன், தீர்வும் காண்பேன். இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசிடம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என செய்திகளை சந்திப்பில் பேசி உள்ளார்
English Summary
Farmers strike reaches 100th day against private sugar mill