போலி போலீஸ் கும்பல் அதிரடி! மகன் பாலியல் வழக்கில் சிக்கினார் என பயமுறுத்தி ரூ.15 லட்சம் மோசடி ...!
Fake police gang Scam 15 lakhs by threatening that son involved harassement case
புதுச்சேரியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், காவல் அதிகாரி என போலியாக நடித்து பணம் பறிக்கும் சைபர் மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் செல்போன் எண்ணுக்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசிய நபர் தன்னை காவல் அதிகாரி என அறிமுகப்படுத்தி, “உங்கள் மகன் பெண் தொடர்பான பாலியல் குற்ற வழக்கில் சிக்கியுள்ளார்” என்று தெரிவித்தார். இந்த தகவலை கேட்ட உடனே பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விவரம் வெளியே தெரிந்தால் குடும்பத்திற்கே அவமானம் ஏற்படும் என்ற பயத்தில், “எப்படியாவது எங்கள் மகனை விடுவிக்க உதவுங்கள்” என்று கேட்டுள்ளனர்.
அப்போது அந்த மர்மநபர், “வழக்கிலிருந்து உங்கள் மகனை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். காவல் அதிகாரி என்று நம்பிய பெற்றோர், அவர் கூறிய கணக்குக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.10 லட்சத்தை அனுப்பி வைத்தனர்.
பின்னர் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் தனியாக விசாரித்தபோது, எந்த பாலியல் குற்ற வழக்கிலும் அவர்களின் மகன் கைது செய்யப்படவில்லை என்பதும், காவல் அதிகாரி போல் நடித்து மர்மநபர் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதே போன்று முத்தியால் பேட்டையை சேர்ந்த மற்றொரு பெண்ணின் செல்போன் எண்ணுக்கும் இதே மாதிரியான அழைப்பு வந்துள்ளது. அந்த நபரும் தன்னை காவல் அதிகாரி எனது தெரிவித்து, “உங்கள் மகன் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார்; அவரை விடுவிக்க ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இந்த தொடர்ச்சியான மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Fake police gang Scam 15 lakhs by threatening that son involved harassement case