இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கு: அறப்போர் இயக்கம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
EPS defamation case High Court orders Araporn Movement to respond
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கில், அவரது மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 முதல் 2021 ஆம் ஆண்டுகள் வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்ட நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு இடம்பெற்று, அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் ஜூலை 22ஆம் தேதி புகார் அளித்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடப்பட்டது. இது தனக்கு அவப்பெயரும், மன உளைச்சலும் ஏற்படுத்தியதாகக் கூறி, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், அவர் முன்னாள் முதல்வர் என்பதால் நேரில் வந்து சாட்சி அளிக்க முடியாது, எனவே வழக்கறிஞர் ஆணையர் மூலம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி தர வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 25ஆம் தேதி விசாரிக்க ஒத்திவைத்தது.
English Summary
EPS defamation case High Court orders Araporn Movement to respond