சோழமாதேவியில் விளைநிலங்களை மூடிய குப்பை மலைக்கு முடிவு...! - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
end mountain garbage covering farmlands Cholamadevi Authorities take swift action
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவி பகுதியில், விளைநிலங்களையும் பாசன வாய்க்கால்களையும் ஒட்டி நீண்ட நாட்களாக குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தன. இதனால் பாசன நீர் வழித்தடங்கள் அடைபட்டு, விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், கடும் சுகாதார சீர்கேடும் நிலவி வந்தது.
இந்த அவலநிலை குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். பொக்லைன் எந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான குப்பைகள் அகற்றப்பட்டிருந்தாலும், நீண்ட காலமாக தேங்கி கிடந்த மண் குவியலை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குப்பைகள் மக்கி விவசாயத்திற்கு ஏற்ற வளமிக்க மண்ணாக மாறியிருந்தாலும், அதில் கலந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதற்கான நிரந்தர இடம் இல்லாததே இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணம் என்பதால், அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், குப்பைகளை அகற்ற முன்வந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
English Summary
end mountain garbage covering farmlands Cholamadevi Authorities take swift action