வெற்று விளம்பர முழக்கம்..திராவிட மாடல் ஆட்சியை சாடிய சீமான்!
Empty advertising noise Seeman criticized the Dravidian model of governance
தமிழ்நாட்டில் அரசு அலுவலங்களில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை எனும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மதுரையில் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்கள் மூவரும் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் மருத்துவம் அளிக்கப்படாததால் உயிரிழந்த துயர நிகழ்வு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மருத்துவம் அளிக்க தாமதமான காரணத்தினாலேயே மூவரும் உயிரிழக்க நேரிட்டது என்று வேதனையுடன் குமுறும் உறவினர்களின் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.ஐம்பதாண்டுகள் திராவிட கட்சிகள் ஆண்டபிறகும் அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் மருத்துவம் கூட கிடைக்கப்பெறாதது இழிநிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.இதுதான் இந்தியாவே வியக்கும் தி.மு.க. அரசின் நான்காண்டு காலச் சாதனையா?
போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்று புகார் கூறிய கஞ்சா கருப்பினை மிரட்டிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வளையங்குளம் துயர சம்பவத்துக்கு என்ன விளக்கமளிக்கப் போகிறார்?
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளி,அரசு மருத்துவமனை, அரசு அலுவலங்களில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை எனும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறையின் மோசமான நிர்வாகச் செயல்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு தலா 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Empty advertising noise Seeman criticized the Dravidian model of governance