எவரும் அறியாத நிவர் புயல் சேதங்கள்.! முதல்வர் வெளியிட்ட புள்ளிவிவரம்.!
edapadi announcement about nivar cyclone
நிவர் புயல் சேதங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"நிவர் புயல் காரணமாக உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் ஆகமொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், புயலின் போது 61 மாடுகளும், ஐந்து எருதுகளும், 65 கன்றுகளும் 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிவர் புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும் 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.
புயல் காரணமாக 18 மாவட்டங்களில் 2064 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்கள் மின் கம்பங்கள் மூலம் வெட்டி போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்து செய்யப்பட்டது. புயலினால் 108 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன 2927 மின்கம்பங்கள் விழுந்துள்ளன. மரங்களை அகற்றி மின்கம்பங்களை சீர்செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மின்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
edapadi announcement about nivar cyclone