அன்று பெரியார்.. இன்று திருமாவளவன்.. பரபரப்பு அறிவிப்பு விடுத்த தி.வி.க.!
DVK Party Leader Kolathur Mani Supports VCK Protest
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கையில், " தற்போதைய அரசியல் சூழலில் நாம் முன்னெடுக்க வேண்டிய பல போராட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், பார்ப்பனிய, பார்ப்பனிய அடிமை இந்துத்துவாதிகளும் வழியமைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய தோழர் திருமாவளவன் அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வெட்டி உருவி எடுத்து, அதை வைத்துக்கொண்டு கேவலமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
மனு சாஸ்திரத்தில் இல்லாத எது ஒன்றையும் அவர் பேசி விடவும் இல்லை.அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசி விடவும் இல்லை என்றபோதிலும் இந்த ஆணவக் கூட்டம் ஆடை அவிழ்வதும் தெரியாமல் ஆட்டம் போடுகிறார்கள். இந்த ஒரு நல்வாய்ப்பை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் மனு சாஸ்திரத்தைத் தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். எல்லா பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களுக்கும் உடன்பாடான உவப்பான ஒரு போராட்டம் தான்.
நம்முடைய தலைவர்கள் பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் 1927 ஆம் ஆண்டிலேயே மனு சாஸ்திரத்தை எரித்து காட்டியிருக்கிறார்கள். அதன் பின்னரும் பல வேளைகளில், திராவிடர் கழகமும், பெரியாரிய தோழர்களும் - நம் அனைவர் மீதும், குறிப்பாக பெண்கள் மீதும் வன்மத்தையும் இழிவையும் வெளிப்படுத்தும் - மனு சாஸ்திர எரிப்புப் போராட்டங்களை பல நேரங்களில் நடத்திக் காட்டி இருக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுத்து இருக்கிற இந்த மனு சாஸ்திரத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபெறுகிற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DVK Party Leader Kolathur Mani Supports VCK Protest