ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் டிரைவர் உயிரிழப்பு..தூத்துக்குடியில் சோகம்!
Driver dies due to chest pain while driving the bus Sadness in Tuticorin
திருச்செந்தூரில் ஓடும் பேருந்தில் அரசுப் பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவுஅரசுப் பேருந்து செம்மறிக்குளம் கிராமத்திற்கு புறப்பட்டது. அப்போது பேருந்தை குலசேகரன்பட்டினத்தை சோ்ந்த அல்டாப் ஓட்டி சென்றுள்ளார் . அப்போது அரசுப் பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து டிரைவர் நிலைதடுமாறியதும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளி தினேஷ் மீதும் மோதி, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. உடனடியாக போலீசார் அங்கு சென்று அரசுப் பேருந்து டிரைவரையும், காயமடைந்த வட மாநில தொழிலாளியையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கே, டிரைவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் வட மாநில தொழிலாளியை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மின்கம்பத்தில் பேருந்து மோதியதால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.
வழக்கம் போல் பணிக்கு வந்த டிரைவருக்கு பேருந்தில் வைத்து திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அந்த நிமிடத்திலும் சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்துவதற்கு முயற்சித்துள்ளாா். ஆனால் மின்கம்பத்தின் மீது பேருந்து மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் உயிர்த் தப்பினா். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
English Summary
Driver dies due to chest pain while driving the bus Sadness in Tuticorin