குடி குடியைக் கெடுக்கும்... இளமையைக் காப்போம்...! - 5000 ரூபாய் ஃபைன் போட்டு அதிரடி காட்டும் கிராம பஞ்சாயத்து... குஷியில் பொதுமக்கள்!
Drinking spoils drink Let protect the youth Grama Panchayat takes action by imposing fine 5000 rupees
மது பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்து சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மதுப் பழக்கத்தால் இளைஞர்களின் வாழ்க்கை சீர்குலைவதைத் தடுக்கவும், குடும்பங்களின் நிம்மதியைப் பாதுகாக்கவும் விழுந்தமாவடி கிராமத்தில் விழிப்புணர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, “மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் கிராமத்தில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் பொதுச்சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, கடந்த 2-ம் தேதி முதல் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திருமணமாகாத ஒருவர் மது அருந்தியதாக உரிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமானவர்கள் மது அருந்திவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு, பிரச்சினை போன்றவற்றில் ஈடுபட்டு, அதன் காரணமாக ஊர் நிர்வாகத்தின் கவனத்துக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளுக்கு கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மதுப் பழக்கத்தைத் தவிர்த்து குடும்ப நலனையும் சமூக அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்றைய நல்ல முடிவு, நாளைய சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமாகும்.
மதுவைத் தவிர்ப்போம்; நமது எதிர்கால வாழ்க்கையையும், குடும்பங்களையும், சமூகத்தையும் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு கருத்துகளும் அந்தப் பதாகையில் இடம்பெற்றுள்ளன.
போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு கிராமமே ஒன்றிணைந்து மதுவுக்கு எதிராக இத்தகைய கட்டுப்பாட்டை அறிவித்திருப்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விழுந்தமாவடி கிராமத்தின் இந்த முயற்சி தற்போது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Drinking spoils drink Let protect the youth Grama Panchayat takes action by imposing fine 5000 rupees