#BigBreaking :: திமுக அமைச்சர் கீதா ஜீவன் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை..!!
DMK minister Geetha Jeevan acquitted in asset hoarding case
தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார். அதிமுக ஆட்சியில் என்.பெரியசாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது 1996 முதல் 2001ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.34 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக என்.பெரியசாமி, அவரை தொடர்ந்து அவரது மனைவி எபிநேசர், மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக அவருடைய மகன்கள் ராஜன், ஜெகன், ஐந்தாவது குற்றவாளியாக கீதா ஜீவனின் கணவர் ஜேக்கப் மற்றும் ஆறாவது குற்றவாளியாக தற்போதைய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே கடந்த 2017 ஆம் ஆண்டு என்.பெரியசாமி காலமானார். இருப்பினும் அவரை தவிர்த்து அவரது குடும்பத்தினர் மீது வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்ததால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு தொடர்பான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் அதே நாளில் திமுக அமைச்சர் மீதான சொத்து குறிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
English Summary
DMK minister Geetha Jeevan acquitted in asset hoarding case