திமுக தலைவர் யார் ஸ்டாலினா? இல்லை அம்மையப்பனா?.. கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்..! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு இன்று செப். 6 நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் முன்பு தலைவர் பதவியை ராஜினாமா செய்த, திமுக வார்டு உறுப்பினர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினர் கலாராணி, தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படாததால் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் 8வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக அடைக்கப்பன் போட்டியின்றி தேர்வான நிலையில், 14 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம்  19 தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக 12 இடங்களிலும், 1வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.கலாராணி, 4வது வார்டில் பாஜக வேட்பாளர் ப.விஜயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

புலியூர் பேரூராட்சியில் பட்டியலின பெண்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த திமுகவினர் அக்கட்சியைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக தேர்ந்தெடுத்தனர். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய தலைமை வலியுறுத்தியதை அடுத்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து,  புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல், கடந்த மார்ச் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கலாராணி உள்ளிட்ட 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்த நிலையில் குறைவெண் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கடந்த மே 25ம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கலாராணி, பாஜக வார்டு உறுப்பினர் விஜயகுமார், 10வது வார்டு திமுக உறுப்பினர் ஆனந்தன் ஆகிய 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்ததால் குறைவெண் இல்லாததால் தேர்தல் மீண்டும் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், புலியூர் பேரூராட்சியில் 4வது முறையாக இன்று தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்திற்கு 15 வார்டு உறுப்பினர்களும் வந்திருந்த நிலையில், முதல் முறை தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டு பதவியை ராஜினாமா செய்திருந்த புவனேஸ்வரி மறைமுக தேர்தலின் மூலம் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, தேர்தல் நடைபெற்ற பேரூராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1வது வார்டு உறுப்பினர் க.கலாராணி தரைத்தளத்தில் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ''எனக்கு நியாயம் வேண்டும். ஏற்கெனவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த புவனேஸ்வரியையே துணைத்தலைவர் அம்மையப்பன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வைத்துள்ளார். இதுதான் கூட்டணி தர்மமா? திமுக தலைவர் யார் ஸ்டாலினா? இல்லை அம்மையப்பனா? மாவட்ட அமைச்சர், ஒன்றிய செயலாளர், துணைத்தலைவர் ஆகியோர் ஜாதி ரீதியில் செயல்படுகின்றனர்.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணான நான் தலைவர் பதவியில் அமரக்கூடாது. அவர்கள் கட்சியை சேர்ந்தவரை தலைவராக தேர்ந்தெடுத்து துணைத்தலைவர் அம்மையப்பனே அந்த இருக்கையில் அமரவேண்டும் என நினைக்கிறார். தேர்தல் நடைபெறும் இடத்தில் என்னை தலைவர் பதவிக்கு என்னை யாரும் முன் மொழியோவே, வழிமொழியவோ இல்லை. இதுகுறித்து அம்மையப்பனிடம் கேட்டால் எதுவும் பேசவில்லை.

முதல்வர் ஸ்டாலின் எனக்கு இந்த பதவி இல்லை என்று கூறட்டும். நான் விலகிக் கொள்கிறேன். இல்லாவிடில் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன். புலியூர் பேரூராட் சியில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. குப்பையைக்கூட அள்ள மறுக்கின்றனர்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஏடிஎஸ்பி கீதாஞ்சலி கலாராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலாராணி போராட்டத்தை கைவிட மறுத்து மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார். கலாராணிக்கு ஆதரவாக அவரது கணவர் கதிர்வேல், மகள் சுசீலா, மகன் அருள் ஆகியோர் அலுவலகத்தின் நுழைவாயில் கேட்டுக்கு வெளியே நின்றனர்.போலீஸார் அவர்களை அங்கிருந்து நகர்ந்து போக சொன்ன நிலையில்,போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புவனேஸ்வரி, துணைத்தலைவர் அம்மையப்பன் மற்றும் திமுக, பாஜக, சுயேட்சை கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறிய நிலையில், கலாராணி போராட்டத்தைத் தொடர்ந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK leader stalin and ammaiyappan comunist party question


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->