"துணை முதலமைச்சர் பதவியை நான் நினைத்திருந்தால் வாங்கியிருக்கலாம்" தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேச்சு!
Deputy CM Post If I Wanted Premalatha Vijayakanths Bold Statement at DMDK Meet
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 31, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களிடையே ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி நிலைப்பாடு மற்றும் தேர்தல் முடிவுகள்:
கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் பேசியதாவது:
கூட்டணியில் தொடர்ச்சி: "நிர்வாகிகளாகிய நீங்கள் விவாதித்துத் தேர்ந்தெடுத்த கூட்டணியில்தான் நாம் இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறோம். நடந்து முடிந்தது யாரும் சற்றும் எதிர்பாராத ஒரு வினோதமான தேர்தல் முடிவு. எனினும், அரசியலில் வெற்றி மற்றும் தோல்விகள் என்பது மிகவும் சகஜமான ஒன்றுதான்."
இன்று மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியின் உண்மையான நிலை என்னவென்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அன்று யாரைத் 'தீயசக்தி' என்று விமர்சித்தார்களோ, இன்று அவர்களின் ஆதரவோடுதான் அந்தத் 'தூயசக்தி' ஆட்சி அமைத்துள்ளார்கள்." என்றார்.
"எந்தப் பேரத்திற்கும் ஆசைப்படாத கட்சி தேமுதிக":
புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "பொதுவாகப் புதிய ஒரு கட்சிக்குக் குறைந்தபட்சம் 6 மாத காலமாவது வாய்ப்புதர வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலைமை அப்படி ஆரோக்கியமாக இல்லை. தமிழகத்தில் எந்தவொரு பேரத்திற்கும், எந்தவொரு பதவிக்கும் ஆசைப்படாத ஒரே ஒரு தூய்மையான கட்சி தேமுதிக மட்டும்தான். நாம் பணத்திற்காகவோ, பதவிக்காகவோ அல்லது ஆடம்பர சோஃபா செட்டிற்காகவோ ஆசைப்படாமல், நாம் பயணிக்கும் கூட்டணிக்கு எப்போதும் உண்மையாக உழைப்பதே தேமுதிகவின் கொள்கை" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
"விஜய் வீடு தேடி வந்து பதவி கொடுத்திருப்பார்":
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) குறித்தும், கூட்டணிப் பேரம் குறித்தும் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, "நாம் நினைத்திருந்தால் தற்பொழுது நடிகர் விஜய்யை நேரில் போய்ப் பார்த்திருக்க முடியாதா? இன்று பலர் அமைச்சர் பதவிக்காக நாலாபுறமும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் மட்டும் நினைத்திருந்தால், விஜய் அவர்களே நமது வீடு தேடி வந்து எனக்குத் 'துணை முதலமைச்சர்' பதவியைக் கொடுத்திருப்பார். ஆனால், தேமுதிக என்பது இதுபோன்ற பதவிகளுக்கோ அல்லது சுயநல அரசியல் லாபங்களுக்கோ ஒருபோதும் ஆசைப்படும் கட்சி கிடையாது." என்றார்.
English Summary
Deputy CM Post If I Wanted Premalatha Vijayakanths Bold Statement at DMDK Meet