கோவையில் ஏற்பட்ட தீ விபத்தில்..அம்மா, மகள்கள் உள்பட 3 பேர் பலி.!
Covai one family 3 members death in fire
கோவை உருமண்டம்பளையம் ரோஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அம்மா, மகள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உருமண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ள நிலையில், இவரது கணவர் ஜோதிலிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதில், ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்து வரும் நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்த போது சமையலறையில் ஒரு பெண்ணும், அவரது அம்மாவும், படுக்கை அறையில் இன்னொரு பெண்ணும் இறந்து கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும் போது வீட்டின் ஹாலில் இருந்த யுபிஎஸ் இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்க மகள் மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு சமையலறையில் இருந்த அஞ்சலி மற்றும் அம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தடயவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது.
English Summary
Covai one family 3 members death in fire