நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை!
Court contempt case Anshul Misra gets one month imprisonment
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எம்.டி.ஏ.வின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர்,பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலம், அதற்குப் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்த காரணத்தால், அதை மீண்டும் தங்களுக்கே வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாததை அடுத்து அன்சுல் மிஸ்ரா மீது லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான,அன்சுல் மிஸ்ராவுக்கு இன்று ஐகோர்ட்டு தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது.இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனது உத்தரவில்,கூறியதாவது: " நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா தனது சம்பளத்திலிருந்து இரண்டு வயதான மனுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையை 3 வாரங்களில் வழங்காவிட்டால் மேலும் 10 நாள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 30 நாட்களுக்குள் அன்சுல் மிஸ்ரா மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றால், அவரை தண்டனை அனுபவிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள், உயரதிகாரிகளுக்கு மட்டுமல்ல சட்டத்திற்கும் பதில் சொல்லியாக வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Court contempt case Anshul Misra gets one month imprisonment