கல்வித்துறையில் சீர்கேடுகள்... எதிர்கட்சித்தலைவர் இரா.சிவா கண்டனம்!
Corruption in the education sector Opposition leader R. Siva condemns
புதுச்சேரி கல்வித்துறையின் சீர்கேடுகள் மலை போல் கொட்டிக்கிடக்கிறது என எதிர்கட்சித்தலைவர் இரா.சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு மாநிலத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்படுத்தப்படும் கல்வித்துறை திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. காலை உணவுத் திட்டம், மதிய உணவுத்திட்டம், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஆசிரியர்களுக்கு கைக்கணினி வழங்குதல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர் நியமனங்கள் போன்ற தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகள், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் கல்வித்தரத்தையும் உயர்த்தியுள்ளன.இத்தகைய மாணவர் நலன் சார்ந்த திட்டங்களைப் பாராட்டுவதோடு, புதுச்சேரி மாநில பாஜக கல்வி அமைச்சர் நமச்சிவாயம், திராவிட மாடல் ஆட்சியில், அரசு பள்ளிகளின் தரம், கற்றல், செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட என்னுடன் வரத் தயாரா? புதுச்சேரி அரசு பள்ளிகள் மூடுவிழா நோக்கி செல்லும் அவலநிலையை மாற்றும் எண்ணம் இந்த அரசிற்கு துளியும் இல்லை.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியின் கீழ், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பல அரசுப் பள்ளிகளில் விரிவுரையாளர்கள் ஒரு வாரத்தில் இரு வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படைக் கொள்கையைப் பின்பற்றாமல், மாணவர் எண்ணிக்கை குறைவு என்பதைக் காரணமாகக் காட்டி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஏற்க முடியாது. எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர் நியமிக்கப்படுவது இளம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தைச் சீர்குலைக்கிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் தனி ஆசிரியர் நியமிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்பு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பது ஏன்? வினாத்தாள் புரியாமல் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த கல்வி ஆண்டில் ஆங்கிலம் மற்றும் நமது பிராந்திய மொழிகளில் இருமொழிக் கேள்வித்தாள் வழங்கப்பட வேண்டும். 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களைத் தோல்வியடையச் செய்யும் முறை, அவர்களின் தன்னம்பிக்கையைப் பாதித்து, கல்வி ஆர்வத்தைக் குறைத்து, இடைநிற்றலை அதிகரிக்கிறது. தமிழ்நாட்டைப் போல 9ஆம் வகுப்பு வரை முழு தேர்ச்சி அறிவிக்கப்பட வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டம் நமது மாணவர்களின் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப இல்லாததால், மாநில பாடத்திட்டத்தை மீண்டும் பின்பற்ற வேண்டும். அவசரக் கோலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையினால் இன்று புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. குலக்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாணவர் விரோத செயற்பாடுகளை, சரி செய்யாத புதுச்சேரி அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டம் தனியார் தொண்டு நிறுவனமான அட்சய பாத்திராவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெங்காயம், பூண்டு மற்றும் முட்டை இல்லாத உணவுகளை வழங்குவதால், உணவின் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. முட்டைகளை அரசு தனியாக வழங்க வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, மதிய உணவுத் திட்டத்தை அரசே முழுமையாக நடத்த வேண்டும், மேலும் மண் சார்ந்த உணவு வகைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் சத்துணவு திட்டம் புத்துயிர் பெற்று, புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
அரசு பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவை மாணவர்களுக்கு பயனுள்ளதாய் இல்லை. யோகா, நுண்கலை, கணினி, விளையாட்டு, ஓவியம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதற்கென தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் நீண்டகால விடுப்பில் இருக்கும்போது, மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் வகுப்புகள் இணைக்கப்படுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. பள்ளிச் சீருடைகள், நோட்டுகள் மற்றும் பாடப்புத்தகங்கள் இன்னும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை. இது கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக உள்ளது.
கல்வித்துறை அலுவலகங்களில் எல்டிசி, யுடிசி போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்தி, அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் டிஸ்லெக்ஸியா உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்கப்பட வேண்டும். பதின்பருவ மாணவிகள் பயிலும் பள்ளிகளில் நாப்கின்களை அழிக்கும் (incinerator) எரியூட்டி வசதி உறுதி செய்யப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற 10% அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 37 இடங்களில் 14 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 23 இடங்களை யார் பயன்படுத்தினர் என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு துரோகம் இழைக்காமல் அவர்களுக்கான சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். பாஜக கூட்டணி அரசு, மாணவர்களின் கல்வி நலனை புறக்கணித்து, தேசிய கல்விக் கொள்கையைத் திணித்து புதுச்சேரி கல்வித்துறை 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. மாணவர்கள் இடைநிற்றல், பெண்கல்விக்கு முக்கியத்துவம், குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, புதுச்சேரி அரசு ஆசிரியர் நியமனம், மாணவர்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், உள் கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் உடனடியாக செய்து தர வேண்டும். தொடர்ந்து மெத்தனப்போக்கை கடைபிடிக்கும் கல்வித்துறையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டத்தை திமுக முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்கட்சித்தலைவர் இரா.சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
Corruption in the education sector Opposition leader R. Siva condemns