சமூக வலைதளங்களில் ஆபாச உள்ளடக்கம் வெளியிட்டதாக புகார்: திருச்சி சாதனா,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு
Complaint regarding the posting of obscene content on social media Case registered against 12 individuals including Trichy Sadhana and actress Dharsha Gupta
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி, இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் உள்ளடக்கங்களை வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் வலசையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்சாக்கோ என்பவர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் கட்டண அடிப்படையில் ஆபாசமான பேச்சுகள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாகவும், அவை 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், குறிப்பிட்ட சில சமூக வலைதள கணக்குகளில் ஆபாசத்தைத் தூண்டும் வகையிலான உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டு, அவற்றை பார்ப்பதற்காக சந்தா கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சிலர் கணிசமான வருமானம் ஈட்டுவதாகவும், சிறார்களும் இந்த உள்ளடக்கங்களை அணுகும் சூழல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பெண்களின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆபாசமான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறி 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிறார்களை குறிவைத்து பாலியல் அல்லது ஆபாச உள்ளடக்கங்களை வெளியிடுவது தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். குறிப்பாக சிறார்களை பாலியல் ரீதியாகத் தூண்டும் அல்லது ஆபாச உள்ளடக்கங்களுக்கு ஈர்க்கும் வகையிலான செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் தீவிரமாகக் கருதப்படுகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது போலீசார் எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர், விசாரணையில் மேலும் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.
சமூக வலைதளங்களில் ஆபாச உள்ளடக்கங்களை வெளியிடுவது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலம் மற்றும் திருச்சி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Complaint regarding the posting of obscene content on social media Case registered against 12 individuals including Trichy Sadhana and actress Dharsha Gupta