கோவை || மாணவிகளே இனி கவலை வேண்டாம்....உங்களுக்காக "போலீஸ் அக்கா" இருகாங்க..!
coimbatore district police akka scheame
தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறார்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியிலான தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இதைத்தடுப்பதற்காக காவல் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து, கோவை மாநகரில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் என்று மொத்தம் 60 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளை மையப்படுத்தி, இதில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டத்தை கோவை மாநகர காவல்துறையின் சார்பில் கடந்த 18 -ந்தேதி தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் குறித்து, கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது, ‘‘மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பல்வேறு பணிகளையும் விடுத்துள்ளனர்.
இவர்கள், தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவிகளை தொடர்பு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுக்கு ஏற்படும் உளவியல் மற்றும் பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர்.
அதுமட்டுமல்லாமல், கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்களை கண்டறிந்து தீர்ப்பது, போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்டவற்றை அறிந்து அதனை காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு வருவது போன்ற பணிகளை மேற்கொள்வர்.
இவர்கள் மாணவிகளுக்கு ஒரு நல்ல சகோதரியாக செயல்பட்டு அவர்கள் அளிக்கும் தகவல்களை ரகசியமாக காப்பர். கோவை மாநகரில் உள்ள 60 கல்லூரிகளுக்கு 37 பெண் காவலர்கள் ‘போலீஸ் அக்கா’வாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தொடர்பு எண்கள் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பார்வையில்படும்படி வைக்கப்பட்டிருக்கும்,’’என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விழாவில் மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையர் சுஹாசினி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
coimbatore district police akka scheame