கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை..!!
CM stalin advises on Rice crops damage due to heavy rains
கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை..!!
வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் பருவம் தவறி பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விலை நிலத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையில் மூழ்கி சேதமடைந்தன.
கனமழையால் பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையிலான ஆய்வு குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் வேளாண் மற்றும் உழவர் பாதுகாப்பு துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கூட்டுறவு துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுகள் முடிவுற்ற நிலையில் நேற்று சென்னை திரும்பிய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில் ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தற்பொழுது பயிர் சேதம் குறித்தான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
CM stalin advises on Rice crops damage due to heavy rains