சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பதற்காக 100 மரங்கள் வெட்டப்பட்டன.!
Chennai build rain water drainage 100 trees cut down
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 15 மண்டலங்களிலும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது கனமழை பெய்யும் என்பதால் செப்டம்பர் மாதத்திற்குள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை முடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கு முந்தைய காலங்களில் கனமழையின் போது எந்தெந்த பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதோ அந்த பகுதிகளில் பெரிய அளவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 15 மண்டலங்களிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மழை நீர் வடிகால் அமைப்பதற்காக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, கே.கே.நகர், அடையார், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாரம் மட்டும் 10 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,
"சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை பாதுகாக்கும் விதமாக அதன் பக்கவாட்டு கிளைகளை மட்டும் வெட்டி வருகிறோம். மேலும், ஒரு மரம் வெட்டப்படும்போது 10 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.
இதனை தொடர்ந்து, மின் கம்பங்களில் உரசும் மரக்கிளைகளை மட்டும் அகற்றி மரங்களை பாதுகாத்து வருகிறோம். இந்த வகையில் மொத்தம் 1,500 மரங்களின் கிளைகளை மட்டும் அகற்றி மரங்களை பாதுகாத்து வருகிறோம்." என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai build rain water drainage 100 trees cut down