செயின் பறிப்பு வழக்கு.. 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை!
Chain theft case 2 people sentenced to 6 years in prison
தூத்துக்குடியில் ஒரு வீட்டில் இருந்த பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்பது போன்று கத்தியை காட்டி மிரட்டி தங்கச் செயினை பறித்துச் சென்ற 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனசேகரன் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு வீட்டில் இருந்த பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்பது போன்று கத்தியை காட்டி மிரட்டி தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இந்த வழக்கில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் மற்றும் தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த சுந்தர்(எ) சுந்தரமூர்த்தி ஆகிய 2 பேரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது.நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் , குற்றவாளிகளான ராபின்சன், சுந்தர்(எ) சுந்தரமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
English Summary
Chain theft case 2 people sentenced to 6 years in prison