ரயிலில் தொடரும் கஞ்சா வேட்டை...! - கேட்பாரற்ற பையில் ஒளித்து வைக்கப்பட்ட 3½ கிலோ கஞ்சா பறிமுதல்...!
cannabis hunt continues train 3 and half kg of cannabis hidden unmarked bag seized
கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக இயக்கப்படும் ரெயில்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே காவலர்களும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்களும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் காவலர்கள் வழக்கமான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

காட்பாடி ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த விவேக் விரைவு ரெயில் வந்தடைந்தது.அப்போது முன்பக்க பொதுப்பெட்டியில் காவலர்கள் தீவிர சோதனை நடத்தினர். கழிவறை அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த ஒரு பை காவலர்களின் கவனத்தை ஈர்த்தது.
சந்தேகமடைந்த காவலர்கள் அந்த பையை திறந்து சோதனை செய்தபோது, அதற்குள் சுமார் 3½ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவலர்கள் கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த பை யாருடையது என்பது குறித்து விசாரணையை தொடங்கினர்.ரெயிலில் பயணம் செய்தவர்களில் யாராவது கஞ்சாவை கொண்டு வந்துவிட்டு, காவலர்களின் சோதனைக்கு பயந்து அதை அங்கேயே விட்டுச் சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரெயிலில் 3½ கிலோ கஞ்சாவை கொண்டு வந்த நபர் யார், எந்த இடத்தில் இருந்து கஞ்சா ரெயிலில் ஏற்றப்பட்டது, அதை எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேட்பாரற்ற பையில் இருந்து பெருமளவு கஞ்சா சிக்கிய சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cannabis hunt continues train 3 and half kg of cannabis hidden unmarked bag seized