திருநெல்வேலி || அக்காவுடன் பழகிய பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு - தம்பி வெறிச்செயல்.!!
brother attack plus 2 student for speak to sister in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படித்து வரும் சக மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்தப் பழக்கம் பள்ளியுடன் முடியாமல் வீட்டிற்குச் சென்றும் தொடர்ந்தது. இதையறிந்த அந்த மாணவியின் தம்பி தனது அக்காவுடன் பேசுவதை நிறுத்துமாறு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரிடம் அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். ஆனால் அந்த மாணவர் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தம்பி, தனது அக்காவுடன் பழகும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரை தாக்குவதற்கு திட்டமிட்டு நான்கு சிறுவர்களுடன் சேர்ந்து மாணவரின் வீட்டுக்குச் சென்றார். பின்னர் அந்த மாணவரிடம், உங்களுடன் பேசவேண்டும், என்னோடு வாருங்கள் என்று கூறி ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அந்த மாணவியின் தம்பி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதில் படுகாயமடைந்த மாணவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேரன்மாதேவியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய 5 சிறுவர்களையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை சேரன்மாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
brother attack plus 2 student for speak to sister in tirunelveli