ஆறு மாதத்திற்கு பிறகு திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து.!
boat transport to tiruvalluvar statue in after six month
குமரிக் கடலின் நடுவே தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்த சிலை கடல் நடுவில் அமைந்துள்ளதால் உப்பு காற்றினால் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக இந்த சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டது.
பராமரிப்பு பணியின் முதல் கட்டமாக சிலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் உள்ளிட்டவைக் கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.
அதன் பிறகு காகித கூழ் கலவையை சிலை மீது ஒட்டி சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று சிலை முழுவதுமாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெர்மன்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை சிலை மீது பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த பணிக்காக சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணி இன்னும் 10 நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு பிறகு வருகிற பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்ததாவது, "வருகிற பொங்கல் முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்து உள்ளனர்.
English Summary
boat transport to tiruvalluvar statue in after six month