அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகார் - பாஜக திட்டவட்டம்.!
bjp pettion against minister ponmudi
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் இழிவாக பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இதையடுத்து தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், சென்னை உயர்நீதிமன்றமும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தமன் சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார்.
இதேபோன்று கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், அமைச்சர் பொன்முடி மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் தெரிவிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பா.ஜ.க. உயர்மட்ட நிர்வாகிகள், மற்ற மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்திருப்பதாகவும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
bjp pettion against minister ponmudi