கலைஞர் கிடப்பில் போட்டதை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுக்க வேண்டும் - பாஜக.! - Seithipunal
Seithipunal


கண்ணகி கோவிலை கேரள அரசிடமிருந்து தமிழக முதல்வர் மீட்டெடுத்து, புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கண்ணகி கோவில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கூடலூர் பளியங்குடி என்னுமிடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 5000 மீ மட்டத்தில் மலையின் மீது அமைந்துள்ளது.

கண்ணகி கோவிலின் முகப்பு வாயில் மதுரையை நோக்கி அமைந்துள்ளது.1817-ல் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய சர்வேயிலும்,1976-ல் தமிழ்நாடு, கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் மற்றும் எல்லை வரைபடத்திலும் கண்ணகி கோவில் தமிழக பகுதிகளில் இருப்பதாகவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோவில் தமிழ்நாட்டைச் சார்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கு கேரளா அரசு தேக்கடியிலிருந்து பாதை அமைத்து, அதன் வழியாகத்தான் தமிழக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது.

அதை வைத்து கேரளா அரசு கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.

மேலும், கண்ணகி கோவில் கேரள மாநிலத்தைச் சார்ந்த பூசாரிகள் அதற்கான பூஜையை நடத்தி வருகின்றார்கள். ஆனால் தேனி பளியங்குடியிலிருந்து வெறும் 6  கி.மீ  தொலைவில் சாலை அமைத்தால் சிலப்பதிகாரப் புகழ் கண்ணகி கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்றுவர முடியும். இதற்காக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில் ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போதைய நிலையில் கண்ணகி கோவில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சேதமடைந்துவிட்டன.கோவிலின் சுற்றுச்சுவர்களும் உடைந்துவிட்டன.இன்னும் சில காலம் இந்நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்புமிக்க மதுரையை மையம் கொண்ட கண்ணகி கோவில் அழிந்துபோகும்.

மேலும் சமீபத்தில் தேனி மாவட்டம் பளியங்குடி கிராமம் சென்ற பொழுது, அக்கிராமத்து மக்கள் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று வரும் பக்தர்களை வரவேற்க நீர்மோர் பந்தலுடன் காத்திருப்பதையும், அதே சமயம் கண்ணகி கோவிலுக்குச் செல்லும் பாதை பெண் பக்தர்கள் செல்ல முடியாத வண்ணம் புதருகள் மண்டிக்கிடப்பதையும் கவலையோடு தெரிவித்தனர்.

எனவே தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள கண்ணகி கோவிலை மீட்டெடுத்து, புனரமைக்கவும் புளியங்குடியிலிருந்து சாலையை அமைத்து, தமிழக பக்தர்கள் கேரளா அரசின் கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக சென்று வணங்கிவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் GK நாகராஜ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP GKNagaraj Say About kannaki kovil issue


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->