மீண்டும் ஒரு மனித-விலங்கு மோதல்...! தனியார் எஸ்டேட்டுக்குள் புகுந்த காட்டு யானை...! - ஆதிவாசி பெண் தாக்கப்பட்டுக் கொடூர மரணம்...!
Another human animal conflict Wild elephant enters private estate Tribal woman brutally attacked and killed
நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நாடுகாணி பகுதியில் அமைந்துள்ள பாண்டியாறு-புன்னம்புழா ஆறு கேரளத்தை நோக்கி சென்று கலக்கிறது. அடர்ந்த வனச்சூழல் மற்றும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடமாக விளங்குவதால், இப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வனத்துறையினர் கடுமையான தடைவிதித்துள்ளனர்.

எனினும், தமிழ்நாடு மற்றும் கேரளத்தைச் சேர்ந்த சிலர் தடையை மீறி ஆற்றில் மீன்பிடித்தல், குளித்தல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், கீழ்நாடுகாணி புன்னம்புழா ஆற்றங்கரையை ஒட்டிய தனியார் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததாக பந்தலூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் இரவோடு இரவாக சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து எஸ்டேட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தேவாலா அட்டி தேக்கம்பாடியைச் சேர்ந்த கும்பிளி, அவரது மனைவி மீனாட்சி (50), மற்றும் உறவினர் மணி ஆகியோர் மீன்பிடிக்க ஆற்றுப்பகுதிக்குச் சென்றிருந்தது தெரியவந்தது.
இரவு நேரத்தில் மீன்பிடித்துவிட்டு, எஸ்டேட்டில் உள்ள கொட்டகையை நோக்கி அடர்ந்த வனப்பாதை வழியாக திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்து நின்றிருந்த காட்டு யானை திடீரென மூவரையும் விரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மீனாட்சி மட்டும் யானையிடம் சிக்கிக் கொண்ட நிலையில், ஆவேசமடைந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Another human animal conflict Wild elephant enters private estate Tribal woman brutally attacked and killed